சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 45ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 24 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் நேற்று முன்தினம் புதிதாக 194 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது.
மாநிலம் முழுவதும் 619 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தொற்று அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு தெரு தனிமைப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில், ஒரே தெருவில் உள்ள இரண்டு வீடுகளைச் சேர்ந்த பத்து பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தத் தெரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முகக்கவசம் அணிவதில் சென்னை மக்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 781ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 19 நாள்களுக்குப் பிறகு அன்றாடம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் ஒன்பது ஆயிரத்தைக் கடந்துள்ளது.

