கடற்கரை சாலைகளில் செல்லவும் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் வெளியிடங்களில் ஒன்றுகூட வேண்டாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், கடற்கரை சாலைகளில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 31ஆம் தேதி இரவு புத்தாண்டுப் பிறப்பை கொண்டாடுவோர், ஓமிக்ரான் பரவல் அபாயத்தை மனதிற்கொண்டு அரசாங்கம் வகுத்துள்ள கொரோனா நடத்தை விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிறரது உணர்வுகள் புண்படாத வகையில் புத்தாண்டுப் பிறப்பைக் கொண்டாட வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஓமிக்ரான் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதியன்று (நாளை) இரவு ஒன்பது மணி முதல் சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்றும் சொகுசு விடுதிகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகளில் புத்தாண்டுப் பிறப்புக்காக வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்தக்கூடாது என்று குறிப்பிட்டுள்ள காவல்துறை கேளிக்கை விடுதிகள், பொது இடங்களில் நடன, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி இல்லை எனக் கூறியுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையினர் 31ஆம் தேதியன்று இரவு முக்கிய இடங்களிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைத்து, பொதுமக்கள் கூடும் இடங்கள் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.
காவலர்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அநாகரிகச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும், சென்னையில் வரும் 31ஆம் தேதி இரவு இருசக்கர வாகனங்களை வைத்து பந்தயம் நடத்தவும் காவல் துறை தடை விதித்து உள்ளது.
வாகனங்களில் வேகமாகச் செல்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் அரசு வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பல மாநிலங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை
டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், ஒடிசா ஆகிய எட்டு மாநிலங்களும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ளன.
பொது இடங்களில் அதிக அளவிலான மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தி உள்ளன.
மகாராஷ்டிராவில் இரவு ஒன்பது மணி முதல் காலை ஆறு மணி வரை ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

