சென்னை: மின்னிலக்க பணத்தில் (க்ரிப்டோ கரன்சி) முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் பெருந் தொகையைப் பெறலாம் என ஆசை காட்டி தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சில வெளிநாட்டுக் கும்பல்கள் பணம் பறித்து மோசடி செய்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இளம் பெண்களை தொலைபேசியில் பேச வைத்து ஏமாற்றுவதால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளையர் ஒருவர், அண்மையில் 4.5 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் அந்த இளைஞரை இளம் பெண் ஒருவர் இணைய செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்பு தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
தாம் சீனாவில் வசிப்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டு நட்பாகப் பேசியதை அடுத்து, இருவரும் தங்களது தனிப்பட்ட கைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் தம்மைக் காதலிப்பதாக இளம் பெண் கூறியதைக் கேட்டு, அவரை முழுமையாக நம்பத் தொடங்கி உள்ளார் அந்த இளைஞர்.
அந்தப் பெண் 'பிட்காய்ன்'களில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று கூறியதுடன், குறிப்பிட்ட இணையதளம் ஒன்றில் முதலீடு செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதை ஏற்று தொடக்கத்தில் சில ஆயிரங்களை முதலீடு செய்த இளையருக்கு ஓரளவு லாபம் கிடைத்துள்ளது. அதனால் அண்மையில் மொத்தமாக ரூ.4.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கவில்லை என்பதுடன், அவர் தொடர்புகொண்ட அந்த இணையதளமும் திடீரென மாயமாகி உள்ளது. தம்மிடம் பேசிய சீனப்பெண்ணைத் தொடர்பு கொண்டு பேசியபோது, தம்மை மலேசிய காவல்துறை கைது செய்துவிட்டதாகவும் தாமும் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் அந்த இளையரால் அப்பெண்ணைத் தொடர்புகொள்ள முடியவில்லை. தாம் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டு காவல்துறையில் இளையர் புகார் அளித்துள்ளார்.

