புத்தாண்டு: நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பாதுகாப்புப் பணியில் 5,000 போலிசார்
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டுப் பிறப்பையொட்டி தென் மாவட்டங்களில் ஐந்தாயிரம் காவலர்களும் சென்னையில் பத்தாயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையைப் போலவே பிற மாவட்டங்களிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் 1,500 காவலர்களும் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன்குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.
அதே போல் தூத்துக்குடியில் 1,500, தென்காசியில் 500 காவலர்கள் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
நெல்லை மாநகரப் பகுதிகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதி இல்லை என காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
மூன்று மாவட்டங்களிலும் இன்று காலை முதல் நாளை காலை ஆறு மணி வரை பல்வேறு பகுதிகளில் விடிய விடிய வாகனச்சோதனை நடத்தப்பட உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அதிகமானோர் செல்லக்கூடாது என்றும், வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
மேலும், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பொது இடங்களில் கூச்சலிடுவது, பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துவது ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூன்று மாவட்டங்களிலும் உள்ள அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பத்தாயிரம் காவலர்கள் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மேலும், இன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு சென்னையில் பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்படுவதாகவும் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அத்தியாவசிய போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜனவரி 1ஆம் தேதி காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக் கட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்றாட கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 25,000ஆக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, சென்னையில் அன்றாடம் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 134 மருத்துவமனைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் இதுவரை 45 பேர் ஓமிக்ரான் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்றும் அவர்களில் 17 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொது மக்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

