தென்காசி: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால் சுரண்டைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள திசையன்விளையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்புக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை அடிக்கடி அருகே அழைத்து இனிப்பு கொடுத்து பேசுவார் என்றும் அப்போது மாணவிகளின் உடலைத் தொட்டு அத்துமீறுவார் என்றும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சில மாணவிகள் மற்ற ஆசிரியர்களிடமும் பெற்றோரிடமும் விவரம் தெரிவித்துள்ளனர். இதனால் கொதிப்படைந்த மாணவிகளின் பெற்றோர் நேரடியாகப் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடமும் பள்ளி தாளாளரிடமும் இது குறித்து முறையிட்டனர்.
இதையடுத்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அதில் ஆசிரியர்கள் சிலர் இடம்பெற்றனர்.
புகாருக்கு ஆளான ஆசிரியரிடமும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இது குறித்து விசாரணைக்குழு எழுத்துபூர்வமாக அளித்த அறிக்கையை அடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் தேடப்பட்டு வருகிறார்.

