புதுக்கோட்டை: மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் (சிஐஎஸ்எஃப்) துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது அங்கு தவறுதலாகச் சென்ற ஒரு சிறுவனுக்கு தலையில் குண்டு பாய்ந்தது.தற்போது அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பகுதியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் புகழேந்தி, தன் தாத்தா வீட்டில் தங்கி படித்து வருகிறான்.
நேற்று காலை அங்குள்ள மலைகள் சூழ்ந்த பயிற்சி மையத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் புகழேந்தி அங்கு சென்றதாகவும் அவனது தலையில் குண்டு பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, புகழேந்தி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
பாதுகாப்புப் படையினரின் அலட்சியம் காரணமாக சிறுவன் தலையில் குண்டு பாய்ந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் புதுக்கோட்டை, திருச்சி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பிலோ, பாதுகாப்புப் படையினர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமான நடவடிக்கை என்றும் பயிற்சி மையம் உள்ள பகுதியில் சிவப்பு கொடி ஏற்றி வைக்கப்படுவதன் மூலம் அங்கு செல்லக்கூடாது என்பது அப்பகுதி மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

