தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி அதிகரித்துள்ளது என்றும் 48 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றிக் காட்டுவதே தமது லட்சியம் என்றும் தமிழக அரசு இதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும் தஞ்சையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
"தஞ்சை மாவட்டத்தில் வழக்கமாக குறுவை சாகுபடி 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர் என்ற அளவிலே இருந்தது. ஆனால் தற்போது இலக்கைத் தாண்டி 1 லட்சத்து 66 ஆயிரத்து 135 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மாபெரும் சாதனைக்கு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும்," என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இந்த விழாவில் 43 ஆயிரம் பேருக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்காக 237 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த விழாவில் மொத்தம் ரூ.1,229 கோடியே 83 லட்சம் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

