பெங்களூரு: கர்நாடகாவில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் குடும்பத்தார் கிராமத்தில் உள்ள தகரக் கொட்டகையில் வசித்து வரும் தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற ஜெகதீஷ் அடஹள்ளி இப்போது விஜயவாடா மாவட்ட காவல்துறை உயரதியாக பொறுப்பில் உள்ளார்.
இவரது சகோதரர் மத்திய அரசுப் பணியிலும் இரு சகோதரிகள் ஆசிரியைகளாகவும் உள்ளனர்.
இவர், பெலகாவி மாவட்டத்தில் உள்ள காக்வாட் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள கூட்டுறவு சங்க ஆலையில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் ஜெகதீஷின் தந்தை ஸ்ரீகாந்த்.
63 வயதான அவர், தன் மனைவி சாவித்திரி (53 வயது) உடன் இன்றளவும் நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிய அதே தகரக் கொட்டகையில்தான் வசிக்கிறார்.
தமது நான்கு பிள்ளைகளையும் நன்கு படிக்க வைத்து பெரிய பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்பதுதான் ஸ்ரீகாந்தின் கனவாக இருந்துள்ளது. இதற்காக கடன் வாங்கிப் படிக்க வைத்ததாகச் சொல்கிறார்.
நான்கு பிள்ளைகளில் ஜெகதீஷ் படிப்பில் படுசுட்டி என்றும் அவர் பட்டயக் கணக்காளராக வேண்டும் என்பதே தமது விருப்பமாக இருந்தது என்றும் சொல்கிறார் ஸ்ரீகாந்த்.
2013ஆம் ஆண்டு தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவருக்காக வாகனம் ஓட்டியபோதுதான் ஐஏஎஸ் தேர்வு குறித்து தெரியவந்ததாம். இதை மகனிடம் அவர் கூற, தந்தையின் விருப்பத்தை ஏற்று நன்கு படித்துள்ளார் ஜெகதீஷ்.
"என் மகன் பெரிய அதிகாரி என்பதற்காக ஆடம்பர வாழ்க்கைக்கு மாற விருப்பம் இல்லை," என்கிறார் ஸ்ரீகாந்த்.

