ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு
நூலகம்: அடிக்கல் நாட்டினார் முதல்வர்
மதுரை: காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் நினைவாக, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, நேற்று அந்நூலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூலகம் சுமார் 2.70 ஏக்கர் நிலத்தில், ரூ.99 கோடி மதிப்பீட்டில், 213,288 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. அடித்தளத்துடன் கூடிய எட்டு தளங்கள் கொண்ட இந்த நூலகத்திற்கு ரூ.10 கோடி செலவில் நூல்கள் வாங்கப்படுகின்றன. தொழில் நுட்பக் கருவிகளுக்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜிக்கு பிணை
புதுடெல்லி: பண மோசடியில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைப் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஐந்தாம் தேதியன்று கைது செய்யப்பட்ட அவர், பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று அவருக்கு பிணை அளிக்கப்பட்டது.
ரயில் மோதியும் உயிர்பிழைத்தனர்
வேலூர்: காட்பாடியைச் சேர்ந்த 37 வயதான யுவராணி நேற்று முன்தினம் தனது ஒன்பது மாத கைக்குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, ரயில் நிலைய தளமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்தது. பதறிப்போன யுவராணி, உடனடியாக தண்ட வாளத்தில் குதித்து, தன் குழந்தையை மீட்டார். அவர் மீண்டும் தளமேடையில் ஏறியபோது, அவ்வழியே வந்த விரைவுரயில் யுவராணி மீது மோதியது. இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. முன்னதாக, ஓட்டுநர் துரித கதியில் செயல்பட்டு ரயிலின் வேகத்தை வெகுவாகக் குறைத்ததால் தாயும் குழந்தையும் தப்பினர்.
உள்நாட்டு விமானச் சேவை குறைப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு சேவைகள் திடீரென குறைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து 270 விமானங்கள் இயக்கப்பட்டு, 30,000 பேர் பயணம் மேற் கொண்டனர். இந்நிலையில், விமானச் சேவையின் எண்ணிக்கை திடீரென குறைந்து, நேற்று முன்தினம் 206 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு, சுமார் 20,000 பயணிகள் மட்டுமே பயணம் மேற்கொண்டனர்.

