திருச்சி: தங்களது உழைப்பில் அறுவடையான கரும்பு மகசூல், நல்ல லாபம் பார்த்து வருவதால் கைதிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மத்திய சிறையில் அடைபட்டுள்ள நன்னடத்தைக் கைதிகளைக் கொண்டு, சிறைத் தோட்டத்தில் கரும்பு, காய்கறி, பழங்கள், வெங்காயம் உள்ளிட்டவை பயிரிடப்படு கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 5 ஏக்கர் நிலத்தில் கைதிகளைக் கொண்டு பயிரிடப்படும் இந்தக் கரும்புப் பயிர், கொரோனா தாக்கம் காரணமாக இவ்வாண்டு 2 ஏக்கரில் மட்டுமே பயிரிடப்பட்டு, திருச்சி மாநகரிலும் மத்திய சிறையின் அங்காடியிலும் விற்பனை செய்யப்பட்டது.
எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தையும் பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில் பயிரிடப்பட்ட கரும்புகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் அவற்றை பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். இதில் கிடைக்கும் வருமானம் சிறைக் கைதிகளுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

