சென்னை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையம் திறக்கப் பட்டுள்ளது. இதனை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் திறந்து வைத்தார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு, உள்நாட்டு விமான நிலையங்களில் பயணிகள், பொதுமக்களின் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளனர்.
தமிழக பொது சுகாதார மையம், சென்னை விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து காலை 9 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வகையில் இந்த தடுப்பூசி மையத்தை அமைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா, ஓமிக்ரான் பரவலின் மூன்றாவது அலையால் நாள்தோறும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தடுப்பூசி போடும் பணியை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்தி உள்ளன.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 17,934 பேர் கிருமிப் பாதிப்புக்கு ஆளாகினர். இவர்களில் 10,652 பேர் ஆண்கள், 7,282 பேர் பெண்கள். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை மொத்தம் 36,905 பேர் உயிரிழந்துள்ளனர்," எனக் குறிப்பிட்டுள்ளது.