சென்னை: தமிழ்நாட்டில் உருமாறிய கொரோனா ஓமிக்ரான் காரணமாக தொற்று அதிவேகத்தில் கூடுகிறது என்றும் அதேவேளையில், அதை ஒடுக்க அரசாங்கம் அசுர வேகத்தில் செயல்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமிக்ரான் கிருமி காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் கிருமித்தொற்று கூடி வருகிறது. அதைத் தடுக்கும் வகையில் மாநில நிர்வாகம் பல கட்டுப்பாடுகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது.
அதனையொட்டி நேற்று முதல் இம்மாதம் 18ஆம் தேதி வரை வழிபாட்டு இடங்கள் மூடப்பட்டன.
ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு நடப்பில் இருக்கும். பொது போக்குவரத்தில் முக்கால்வாசி அளவுக்கு மட்டுமே பயணிகள் பயணம் செய்ய முடியும்.
கொவிட்-19க்கு எதிரான கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 20,911 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாகவும் 25 பேர் மரணமடைந்து விட்டதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் கூறின. ஓமிக்ரான் தொற்றியோர் எண்ணிக்கை 241 ஆகியது.
மாநிலத்தில் இப்போது 103,610 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்ற ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு இப்போதுதான் இந்த எண்ணிக்கை 100,000ஐ கடந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தொற்று வேகமாகக் கூடி வருகிறது என்றாலும் ஓமிக்ரான் தொற்றைச் சமாளிக்க மாநிலம் முழுமூச்சில் ஆயத்தமாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார்.
மாநிலத்தில் இப்போது மக்கள்தொகையில் 64 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். 15 முதல் 18 வரை உள்ள பதின்ம வயதினரில் 74 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி இயக்கத்திற்குப் பொதுமக்கள் அளிக்கும் ஆதரவு மிகவும் ஊக்கமூட்டுவதாக இருக்கிறது என்றார் முதல்வர்.
இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ.200லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, தமிழக முதல்வர் உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கூடுதல் தடுப்பூசி இயக்கத்தையும் தீவிரப்படுத்தும்படி மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.

