மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரைப் பணயம் வைத்து வீரர்கள் வெற்றிவாகை சூடும் நிலையில், பரிசு வழங்குவதில் இன்னும் குழப்பம் நீடிப்பதாக வெற்றிபெற்ற காளையர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
வெற்றியாளர்களைத் தீர்மானிப்பதில் ஆள் பலம் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார் மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கார்த்திக் ராஜா.
இதேபோல், 21 காளைகளை அடக்கி, சிறந்த மாடுபிடி வீரருக் கான முதல் பரிசை வென்ற பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனும் வருத்தம் தெரிவித் துள்ளார்.
கார்த்திக் ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன்.
"பொதுவாக ஜல்லிக்கட்டு நடைபெறும்போது வெற்றிபெற்றவர்கள் குறித்த அறிவிப்பில் பல்வேறு குளறு படிகள் இருக்கும். அந்த குளறு படிகள் இப்போதும் தொடர்கின்றன.
"ஆள் பலம்தான் யார் பரிசு பெறவேண்டும் என்பதையும் வெற்றியாளரையும் தீர்மானிக்கிறது. இதன்மூலம் அடித்தட்டு நிலையில் இருந்து வருகின்ற என்னைப் போன்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
"கடந்த ஆண்டு நான் அதிக காளைகளைப் பிடித்தபோதும்கூட எனக்கு முதல் பரிசு வழங்கப்படவில்லை. இரண்டாம் பரிசுதான் கிடைத்தது. அதனால், அப்போது விழாவைப் புறக்கணித்துச் சென்றேன்.
"இனியும், வருங்காலத்தில் இதுபோன்ற நிலை தொடராமல் மாறவேண்டும்," என்றார்.
தமிழகத்தில் போகிப் பொங்கலன்று இவ்வாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியது. அதிலிருந்து, இப்போட்டிகள் தினமும் களைகட்டி வருகின்றன.
மதுரை: மதுரை மாவட்டம், பால மேட்டில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் முதலிடம் பிடித்து பரிசை வென்றுள்ளார்.
இவர், செய்தியாளர்களிடம் பேசிய போது, "ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசாங்க வேலை வழங்க வேண்டும். முதல்வர் எனது கோரிக்கை குறித்து ஒரு நல்ல முடிவெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார். 21 காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப் பட்டது. படங்கள்: ஊடகம்

