பழனி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள், கடந்த 422 ஆண்டுகளாக தாங்கள் கொண்டுசென்று வந்த பழைமைமிக்க வேல்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
நத்தம் அருகே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தைப்பூச விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியிலிருந்து நாட்டுக்கோட்டை நகரத்தார் காவடி எடுத்து, வேல் ஏந்தி பாதயாத்திரையாக பழனி மலைக்குச் செல்வது வழக்கம்.
அந்த வேல்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் வைத்து அபிஷேகம் செய்யப்படும்.
இவ்வாண்டும் பாதயாத்திரையைத் தொடங்கிய பக்தர்கள், வெள்ளிக்கிழமை (ஜனவரி 14) அன்று சமுத்திராபட்டி எனும் ஊரில் தங்கியிருந்தனர்.
அப்போது, அவர்கள் கொண்டு வந்த தாமிரப் பட்டையால் செய்யப்பட்ட இரண்டு வேல்கள், ஒரு வெள்ளி பீடம் உள்ளிட்ட பொருள்களைக் காணாமல் போயின.
நத்தம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
பலமணி நேரம் தேடலுக்குப் பின்பும் வேல் கிடைக்கவில்லை.
அதை அடுத்து, புதிய வேல்களுக்கு பூசை செய்யப்பட்டு பக்தர்கள் தங்களது காவடி பாதயாத்திரையை தொடர்ந்தனர்.
மேலும் பாரம்பரியமிக்க வேல் கிடைத்துவிட்டால் அவற்றுக்கே பாரம்பரிய முறைப்படி மீண்டும் பூசை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
தாங்கள் புதிதாக கொண்டு சென்ற வேல்களை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காணிக்கையாக செலுத்தப் போவதாக அவர்கள் கூறினர்.