அமைச்சர்: கொரோனா சிகிச்சைக்காக 100 சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
சென்னை: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நல்ல பலன் கிடைக்கும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊடரங்கு காரணமாக தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் குறைந்துள்ளது என்றும் அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
இம்முறை ஊரடங்கின்போது பொதுமக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கொரோனா வழிகாட்டி விதிமுறைகளைக் கடைப்பிடித்ததாகவும் அவர் பாராட்டினார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கண்காணிப்பு மையத்தை அவர் பார்வையிட்டார்.
அங்கு சிகிச்சை பெறுவோரிடம் அவர்களுடைய உடல்நிலை குறித்தும் அங்கு அளிக்கப்படும் உணவு உள்ளிட்ட மற்ற வசதிகள் குறித்தும் அமைச்சர் விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசி மட்டும்தான் ஓமிக்ரான் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள கைவசம் உள்ள ஒரே ஆயுதம் என்றார்.
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா சிகிச்சைக்காக 91,902 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைய சில நாள்களாக தொற்று அதிகரித்த போதும், மருத்துவமனைகளில் இதுவரை 8,912 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
கொரோனா தொற்றுக்குள்ளான அனைவருமே மருத்துவமனைகளை நாட வேண்டியதில்லை என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
லேசான அறிகுறி உள்ளவா்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் வீடுகளில் உள்ளவா்களைக் கண்காணிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் அவர் கூறினார்.
"கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும்கூட உயிரிழப்பை தவிா்க்க தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் இறப்பின் விளிம்புக்குச் செல்லத் தேவையில்லை," என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மேலும் நூறு சித்த
மருத்துவ மையங்கள்
கொரோனா தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாக நூறு இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழகத்தில் சில இடங்களில் சித்த மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இம்மையங்கள் மூலம் ஏராளமானோர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
75% சிறார்களுக்குத் தடுப்பூசி
தமிழகத்தில் உள்ள சிறார்களில் சுமார் 75 விழுக்காட்டினருக்கு குறுகிய காலத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றும் அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமிக்ரான் நிலவரம்
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று முன்தினம் 11 மாவட்டங்களில் 22 பேர் தொற்றுப் பாதிப்புக்கு பலியாகிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் புதிதாக 23,975 பேரை கிருமி தொற்றியுள்ளது.
இதுவரை 29 மாவட்டங்களைச் சேர்ந்த 241 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் அனைவருமே சிகிச்சைக்குப் பின் தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளனர்.

