மதுரை: உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று சிறப்பாக நடந்தேறியது. இம்முறை சுமார் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது என்றபோதிலும், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மூலம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் கண்டு ரசித்தனர்.
இம்முறை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுமார் 700 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.
திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அவற்றை அடக்க துணிச்சலுடன் பங்கேற்றனர்.
பார்வையாளர்கள் குறைவாக இருந்தபோதிலும், அலங்காநல்லூர் உட்பட அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆங்காங்கே வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் வெளியூர்களில் இருந்து வந்த பார்வையாளர்கள் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். உள்ளூர் மக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் சோகமடைந்தனர்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நேரலையாக தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இணையத்திலும் ஒளிபரப்பாகிறது என்று விழாக்குழுவினர் அறிவித்தனர்.
அமைச்சர் பி.மூர்த்தியும் மாவட்ட ஆட்சியர் அனிஷ்கேரும் நேற்று காலை கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக மாலை வரை எழுநூறு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
சில மாடுகள் களத்தில் நீண்ட நேரம் நின்றபோதும் அவற்றை யாரும் நெருங்க முடியவில்லை. சில மாடுபிடி வீரர்கள் துணிச்சலாகச் செயல்பட்டு சில காளைகளை அடக்கினர்.
அலங்காநல்லூரிலும் சிறந்த வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
மேலும் தொலைக்காட்சிப் பெட்டி, பீரோ, கட்டில் என மேலும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியின் முடிவில் வெற்றிபெற்ற அனைத்து மாடுபிடி வீரர்களுக்கும் ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது.

