ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாப்பனக்கோட்டையைச் சேர்ந்த 119 வயதான லட்சுமி அம்மாள், தமது 119வது பிறந்தநாளைக் கொண்டாடி உள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரிடம் ஆசி பெற்றனர். மேலும், அவரது குடும்பத்தாருடன் இணைந்து பட்டாசுகளும் வெடித்துக் கொண்டாடினர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி அம்மாளின் கணவர் காலமானார். அதன் பின்னர் தனது இரண்டு மகன்கள், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரது பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், கொள்ளுப் பேத்திகளின் எண்ணிக்கை ஐம்பதைக் கடந்துவிட்டது. தள்ளாத வயதிலும் தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தூங்கி எழுந்து, மாடுகளைப் பராமரிப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை முடிந்த அளவுக்குச் செய்கிறார் லட்சுமி அம்மாள். இதுவரை அவரை எந்த நோயும் தாக்கியதில்லை. கேழ்வரகு, கம்பு போன்ற தானிய உணவு வகைகளை மட்டும் சாப்பிடுகிறார்.

