பொங்கலுக்கு சொந்த ஊர் சென்ற ஆயிரக்கணக்கானோர் திரும்பினர்
சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர்களுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் மொத்தமாக சென்னை திரும்பியதால், கோயம்பேடு, கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பயணிகளும் வாகனமோட்டிகளும் சிரமங்களுக்கு ஆளாகினர்.
பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் இருந்து சுமார் 337,000 பேர் கடந்த வாரம் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டனர்.
பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்குவதாக அறிவித்தது. அதேபோல் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக கடந்த 17ஆம் தேதி முதல் இன்று வரை சுமார் பத்தாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
குறிப்பாக நேற்று முன்தினம் மட்டும் 4,130 பேருந்துகள் இயக்கப்பட்டதை அடுத்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள பேருந்து நிலையத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் வந்தவண்ணம் இருந்தன.
இதனால் கோயம்பேடு நோக்கிச் செல்லும் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் திணறின.
பெரும்பாலான பயணிகள் இரவு நேரப் பயணம் மேற்கொண்டதால், சென்னையில் கடந்த இரு தினங்களாக அதிகாலை சுமார் 4.30 மணியில் இருந்து 7.30 மணிவரை அரசுப் பேருந்துகளும் தனியார் ஆம்னி பேருந்துகளும் கோயம்பேடு செல்லும் சாலைகளில் வரிசையாக நின்றிருந்தன.
தென்மாவட்டங்கள், கோவையில் இருந்து சென்னை வந்த பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது என்றும் பெரும்பாலான பேருந்துகள் ஒரே சமயத்தில் சென்னையை வந்தடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்புப் பேருந்துகள் இன்று மாலை வரை இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் மூலம் சுமார் 400,000 பேர் சென்னை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.

