387 தெருக்களில் தடுப்புக் கம்பி வேலிகள் அமைப்பு: வாகனங்களுக்குத் தடை
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அண்மைய சில தினங்களாக சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள இடங்களைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. அவற்றுள் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார், அண்ணாநகர் ஆகிய நான்கு மண்டலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது தெரிய வந்திருக்கிறது.
இப்பகுதிகளில் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தொற்று உறுதியாகும் பட்சத்தில் லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பின் அவர்கள் தங்கள் வீட்டிலேயே ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களைக் கண்காணிக்கவும் மருத்துவ ஆலோசனை வழங்கவும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற உதவிகளுக்காக களப்பணியாளர்களும் உள்ளனர்.
சென்னையில் தொற்றுக்கு ஆளானவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு வெளியே 'ஸ்டிக்கர்'கள் ஒட்டப்படுகின்றன. அதில், பாதிப்புக்கு ஆளானவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை வரையிலான நிலவரப்படி, சென்னையில் 58 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. அவர்களில் சுமார் 71 விழுக்காட்டினர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் சுமார் 39 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அவற்றுள் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள தெருக்கள் அடையாளம் காணப்பட்டு, கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரே தெருவில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்தத் தெரு மூடப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் தற்போது 387 தெருக்கள் கட்டுப் பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளன. அந்த தெருக்களில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக் கட்டைகள், வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் 40,000 தொலைபேசி அழைப்புகள்
சென்னையில் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை மருத்துவக் குழுவினர் தொலைபேசி வழி தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கி வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். தினமும் அதிகபட்சமாக 40,000 அழைப்புகள் வருவதாகவும் நோயாளிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இதற்கிடையே, தமிழக மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் இருமடங்காக அதிகரித்துள்ளது.
அதேபோல் உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கையும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை, சேலம், மதுரை, வேலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில்தான் உயிர்வாயு தேவைப்படும் நோயாளிகள் அதிக அளவில் உள்ளனர்.
இம்மாதம் 1ஆம் தேதி மாநிலம் முழுவதும் மருத்துவமனையில் தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 8,340 பேரில் 366 பேர் மட்டுமே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்.
இந்நிலையில், கடந்த 17ஆம் தேதியன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 152,348ஆக அதிகரித்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கை 814ஆக கூடியுள்ளது.
அதேபோல் ஜனவரி 1ஆம் தேதி உயிர்வாயு தேவைப்படுவோர் எண்ணிக்கை 1,392ஆக இருந்த நிலையில், 17ஆம் தேதி நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 4,013ஆக அதிகரித்துள்ளது.

