சென்னை: பெண் கல்வியை முன்னிறுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மும்பையைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ஜெய்பாரி சாயிபடேல் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிதிவண்டியில் பயனம் மேற்கொண்டுள்ளார்.
அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் தானே பகுதியில் வசிக்கும் ஆஷிஷ் படேல் லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரது மகளான ஜெய்பாரி ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நாடு முழுவதும் மிதிவண்டியில் வலம் வந்து, பெண் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியுள்ளார் இச்சிறுமி.
இதையடுத்து, பெற்றோரின் ஆதரவுடன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி காஷ்மீரில் இருந்து தன் பயணத்தைத் தொடங்கிய சிறுமி ஜெய்பாரி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா வழியாக சுமார் 3,600 கிலோ மீட்டர் பயணம் செய்து நேற்று முன்தினம் தமிழகம் வந்தடைந்தார்.
இந்நிலையில், விருதுநகர் அரிமா சங்க நிர்வாகிகள் சிறுமி ஜெய்பாரிக்கு வரவேற்பு அளித்தனர். அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் 21ஆம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ள சிறுமியின் சாதனைப் பயணத்தை அனைவரும் பாராட்டினர்.

