பழனி: கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஐந்து நாள்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. இதையடுத்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முருகக் கடவுளின் திருத்தலங்களில் ஒன்றான பழனி மலைக் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் மேற்கொண்டு வழிபட்டனர்.
கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருந்தன.
இதனால் தைப்பூசத்தையொட்டி, பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்த முடியவில்லை. ஏராளமான பக்தர்கள் கோவில்களுக்கு வெளியே பிரார்த்தனை செய்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
வெளியூர்களில் இருந்து பழனி மலைக்கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்தவர்கள் திரும்பிச் செல்ல இயலாமல், அங்கேயே காத்திருந்து நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் மாநிலம் முழுவதும் பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.

