ராமேசுவரம்: நடுக்கடலில் இலங்கை கடற்படை நடத்திய திடீர் தாக்குதலால் தமிழக மீனவர்களின் விசைப்படகு ஒன்று கடலில் மூழ்கியது. இதில், அந்தப் படகில் இருந்த ஏழு மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் உயிருக்குப் போராடிய ஏழு மீனவர்களையும் காப்பாற்றி கரைசேர்த்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது நீடித்து வருகிறது.
நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து 550க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தங்களுடைய கப்பலை மீனவர்களின் சிறிய படகு மீது வேகமாக மோதியுள்ளனர்.
இதில், அந்த விசைப்படகு கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த ஏழு மீனவர்களும் கடல்நீரில் குதித்தனர். நடுக்கடலில் அவர்கள் தத்தளித்தபடி உயிருக்குப் போராடுவதைக் கண்ட மற்ற மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
"இலங்கை கடற்படைக் கப்பல் மோதியதில் மீனவர்களின் விசைப்படகில் விரிசல் ஏற்பட்டது. இதனால் படகுக்குள் கடல்நீர் புகுந்தது.
"இதையடுத்து, படகு ஒருபுறமாக கவிழத் தொடங்கியதால் மீனவர்கள் வெளியே குதித்தனர். அவர்களைக் காப்பாற்றாமல் இலங்கை கடற்படைக் கப்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
"இப்போதெல்லாம் நம் மீனவர்கள் வாரத்துக்கு இருமுறை மட்டுமே மீன்பிடிக்க கடலுக்குச் செல்கிறார்கள்.
"எந்த நேரத்திலும் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தும் என்ற அச்சமே இதற்குக் காரணம்," என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார்.