சென்னை: தமிழின் தொன்மையையும் தமிழரின் பண்பாட்டையும் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏழு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள், சங்ககால கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வு நடத்தப்படும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாகத் திகழ்கிறது என்றும் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர் வாழ்ந்த பகுதிகளில் நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மை, பண்பாடு மற்றும் விழுமியங்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது 2022ஆம் ஆண்டில் ஏழு இடங்களில் அகழாய்வுகள் செய்யப்படவுள்ளதாக குறிப்பிட்டு முதல்வர், அந்த இடங்களையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, கீழடி, அதனைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் பகுதிகளில் அகழாய்வு நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் மூன்றாம் கட்ட ஆய்வு, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் இரண்டாம் கட்ட ஆய்வு நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதே போல், வெம்பக்கோட்டை (விருதுநகர்), துலுக்கர்பட்டி (திருநெல்வேலி), பெரும்பாலை (தர்மபுரி) ஆகிய மூன்று இடங்களிலும் முதல் கட்ட ஆய்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அகழாய்வுப் பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது என்றும் இதற்காக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் சங்க காலக் கொற்கைத் துறைமுகத்தினை அடையாளம் காண முன்களப் புல ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.
"இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பிலிருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக நிறுவ வேண்டும்.
"அதற்கு மேற்குறிப்பிட்ட அகழாய்வுகளும், முன்கள புலஆய்வுப் பணிகளின் முடிவுகளும் உறுதி செய்யும்," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.