தமிழகத்தில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் ஓமிக்ரான் தொற்றூ அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்,” என்று கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும்போது, கடந்த 16ஆம் தேதி நடைமுறைபடுத்தப்பட்ட அதே அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். தடை விதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கான தடை தொடரும்.
வெளியூரில் இருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோ சேவை செயலிமூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.
வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட ரயில் நிலையங்களுக்கும் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று முதல்வர் ஸ்டாலின் விவரித்தார்.