சென்னை: தமிழகத்தில் இந்தப் புத்தாண்டு தொடங்கியது முதல் டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு சற்று ஏறுமுகம் காண்பதுபோல் தெரிவதாகவும் கடந்த 20 நாள்களில் மட்டும் 463 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்கள் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மாநிலத்தில் கடந்த ஆண்டில் டெங்கிக் காய்ச்சலால் 6,039 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில், எட்டுப் பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோன்று கடந்த ஆண்டில் 150 பேருக்கும் மேற்பட்டோா் சிக்குன் குனியா, 500க்கும் அதிகமானோா் மலேரியா, 1,028 போ் எலிக் காய்ச்சல், 2,220 போ் பாக்டீரியா தொற்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்றும் சுகாதாரத் துறை விவரம் வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டில் கடந்த 20 நாள்களில் மட்டும் 463 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விழிப்புணா்வு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
"தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் காய்ச்சல் முகாம்களில் கொரோனாவுடன் டெங்கி, ஜிகா, சிக்குன்குனியா, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கும்படியும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் டெங்கிக் காய்ச்சல் தடுப்புப் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்," என்றனர்.
இதற்கிடையே, பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்று வட்டாரப் பகுதிகளையும் துாய்மையாகப் பராமரிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.