சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இவருக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் என 58 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏறக்குறைய ரூ.3 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 6 கிலோ தங்க நகைகள், 13 கிலோ வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடு, அவரது உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று முன்தினம் ஒரே சமயத்தில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.
அன்பழகனுக்கு நெருக்கமாக இருந்த பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமிவீட்டிலும் இச்சோதனை நடந்தது.
இதுதொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கே.பி.அன்பழகன் வீட்டிலிருந்து ரூ.2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரத்து 650 ரொக்கப் பணம், 6 கிலோ 637 கிராம் தங்கம், 13 கிலோ 850 கிராம் வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், வங்கிப் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இதுவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி உள்ளிட்டோர் சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிக்கி உள்ளனர். இப்பட்டியலில் கே.பி. அன்பழகனும் இப்போது சேர்ந்துள்ளார்.
கே.பி. அன்பழகன் தன்னுடைய வருமானத்தை விட கூடுதலாக ரூ.11.32 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் கே.பி.அன்பழகன் கூறுகை யில், "பொதுமக்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அந்த ரூ. 500 கோடி ஊழலை திசை திருப்பவே திமுக அரசு எனது வீட்டில் சோதனையை நடத்தி உள்ளது. இரவு வரை நடந்த சோதனையில் எனது வீட்டிலிருந்து பணம், நகை, ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறையினர் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளனர். ஆனால், திமுக அரசுக்கு இணக்கமாக செயல்படவேண்டும் என்பதற்காக பல தொலைக்காட்சிகளும் எனது வீட்டில் கட்டுகட்டாக பணம், நகை, ஆவணங்களை கைப்பற்றியதாக பொய்த் தகவலை பரப்பி வருகின்றன. இப்பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்," எனத் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. உப்புத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிப்பது இயல்புதான். மற்றபடி, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இடமில்லை.
போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்