சென்னை: தனது உயிருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரைத் தொடர்ந்து, பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடாரை கைது செய்து, சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் காவல்துறை அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.
அவரை பிப்ரவரி 3ஆம் ேததி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி சுப்பிரமணியன் உத்தர விட்டதை அடுத்து, பூந்தமல்லி கிளைச் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஹரிநாடார் தனது உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி வருவதாக திருவான்மியூர் காவல்நிலையத்தில் நடிகை விஜய லட்சுமி, 42, புகார் அளித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி நாடார், 48.
பண மோசடி வழக்குத் தொடர்பில் கைதாகி, கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஹரி நாடாரை விசாரணைக்காக தமிழகம் அழைத்து வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.