கொரோனா காலகட்டத்தில் சென்னை நிறைய மாறிவிட்டது. சென்னைவாசிகளும் மாறிவிட்டனர். ஆனால், வழிதவறிய குழந்தை யைப் போல் தவிப்பில் உள்ளனர்.
சிங்காரச் சென்னையின் சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அனைவரையும் அசைத்துப் பார்த்துவிட்டது கொரோனா.
காலையில் பரபரப்பு, மாலையில் பொழுதுபோக்கு என்பதுதான் கொரோனாவுக்கு முந்தைய சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை. மெரினா கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள் என்று சுழற்சி முறையில் வாரந்தோறும் தனித்தோ குடும்பத்துடனோ பொழுதைக் கழிப்பதுதான் சென்னைவாசி களின் வழக்கம்.
தெருவுக்குத் தெரு துரித உணவகங்கள், பெட்டிக்கடைகள், சந்தைகள், தள்ளுவண்டிகள், எங்கும் மக்கள் கூட்டம் என்று சென்னை என்றாலே எப்போதும் பரபரப்புதான். சென்னைவாசிகளும் இதைத்தான் விரும்பினர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிலவிய காட்சி.
ஆனால், 'இதெல்லாம் கூடாது' என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறது கொரோனா கிருமி.
கொரோனா கிருமி தொடர்பான பயம் இப்போது மக்கள் மத்தியில் சலிப்பாக மாறிவிட்டது. 'அட போங்கப்பா... அதுவும் (கொரோனா) நம்முடன் இருந்துவிட்டுப் போகட்டும்...' என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் சமூக, பொருளியல் கட்டமைப்புகள் ஆட்டங்கண்டுள்ளன. சாலையோர வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பாரபட்சம் இன்றி அனைவரையும் புலம்ப வைத்துள்ளது கொரோனா தொற்று.
இந்நிலையில், கொரோனா கிருமி இம்மாநகரத்தில் ஏற்படுத்தி உள்ள தாக்கம் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஏனெனில், பணப்புழக்கம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சில காலம் ஆகும் என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.
"பணப்புழக்கம் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி உண்டாகும். தனி நபர் முதல் நிறுவனங்கள் வரை கடன் பெற்று முதலீடு செய்வதுதான் பண சுழற்சிக்குக் கைகொடுக்கும். வங்கிகள் கடன் தர தயங்குகின்றன.
"கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உத்தரவாதத்தையும் அதற்கான மூல ஆதாரங்களையும் பல நிறுவனங்களால் முன்வைக்க இயலவில்லை," என்கிறார் வங்கிச் சேவை ஆலோசகரான ஸ்ரீனிவாசன்.
பண சுழற்சி இல்லாததால் அனைத்து தொழில் நடவடிக்கைகளும் நிலைகுத்தி உள்ளதாகச் சுட்டிக்காட்டும் இவர், தொழில் நடவடிக்கைகள் வேகமெடுக்காமல் பொருளியல் மீட்சி என்பது சாத்தியமல்ல என்கிறார்.
சென்னையில் கல்வித்துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்கிறார் கல்வி நிறுவனம் நடத்தி வரும் திரு.ரகுநாதன்.
"தொழிலில் லாபம் பார்க்க வேண்டும் என்ற இலக்கு, ஆசை எல்லாம் போய்விட்டது. நஷ்டம் ஏற்படாமல் இருந்தாலே போதும் என்று கடந்த ஆண்டு நினைத்தேன். இப்போதோ தொழிலில் நீடித்திருப்பதே பெரும் சவாலாக உள்ளது.
"மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் கல்விக்கட்டணம் செலுத்த மாணவர்கள் விரும்பவில்லை. இணையம் வழி பாடங்கள் நடத்தப்படுவதை பெற்றோர் ஏற்கவில்லை," என்கிறார் ரகுநாதன்.
சிறிய, நடுத்தர வணிக நிறுவனங்கள் ஊதியம் வழங்க முடியாததால், ஆட்குறைப்பு செய்துள்ளன. அலுவலக வாடகையைக் கூட செலுத்த முடியாத நிலையில், அது அமைந்துள்ள கட்டட உரிமையாளரையே, தொழிலில் பங்குதாரராகச் சேர்த்துக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் வட இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு தேடி தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களை முதலில் அரவணைத்தது சென்னைதான்.
முன்பு சென்னையில் உள்ள உணவகங்கள், தங்குவிடுதிகளிலும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களிலும் வடஇந்திய தொழிலாளர்கள்தான் நிறைந்து காணப்பட்டனர்.
இப்போது அவர்களில் 90 விழுக்காட்டினர் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். ஊதியம் வழங்கப்படாததால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதனால் பெரும்பாலான உணவகங்கள் ஆள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பு என்று கூறப்பட்ட நிலை மாறி, இன்று திரும்பிய பக்கம் எல்லாம் 'வாடகைக்கு - டு லெட்' (TO LET) என்ற அறிவிப்பைக் காண முடிகிறது.
பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு படை எடுத்த நிலை மாறி, ஆயிரக்கணக்கானோர் சென்னையில் இருந்து வெளியேறிவிட்டனர். சென்னையின் எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ஒருமணி நேரம் காத்திருந்தால், வீட்டுச் சாமான்களுடன் நகரை விட்டு வாகனங்களில் வெளியேறும் சில குடும்பங்களையாவது பார்க்க முடிகிறது.
சினிமாதான் தமிழர்களின் முக்கிய பொழுதுபோக்கு என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பண் டிகையையொட்டி வெளியான திரைப்படங்களைத் திரையரங்கில் சென்று பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
"குறிப்பிட்ட ஒரு படத்தைக் காணச் சென்றபோது, திரையரங்கில் ஒருவர்கூட இல்லை. குறைந்தபட்சம் ஐந்து டிக்கெட்டுகள் விற்பனையானால்தான் படம் திரையிடப்படும் என்றனர். அதனால் நானே ஐந்து டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்த்தேன். சென்னையில் இவ்வாறு நடந்தது என்று சொன்னால் பலரால் நம்ப முடியாது," என்கிறார் தமிழ்த் திரையுலகின் முக்கிய மக்கள் தொடர்பாளர் ஒருவர்.
சென்னை மக்கள், கடந்த மாதம் பெய்த கனமழையை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார்கள். ஒட்டுமொத்த மாநகரையும் புரட்டிப்போட்டு வேடிக்கை பார்த்தது வெள்ளப் பெருக்கு.
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் வசதி படைத்தவர்கள் குடியிருக்கும் பகுதி. அங்கே 'லேக் ஏரியா'வைப் பார்க்கலாம். ஆனால் 'லேக்' எங்கே போனது?
"சேத்துப்பட்டு பகுதியில் ஆகச் சிறிய ஏரியை பார்க்க முடியும். அது தற்போது சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. இந்தச் சிறிய ஏரிதான் கடந்த 1950ஆம் ஆண்டு வரை சென்னையின் கோடம்பாக்கம் மேம்பாலம், தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை, தேனாம்பேட்டை வரை நீண்டிருந்தது.
"ஆனால் அரசாங்கமும் மக்களும் சேர்ந்து ஏரி மீது ஏறி வீடுகளையும் கட்டடங்களையும் கட்டி அதை விழுங்கிவிட்டனர். மதுரையில் உலகநேரி கண்மாயைத் தூர்த்துத்தான் உயர்நீதிமன்ற கிளைக்கான கட்டடம் எழுப்பப்பட்டது என்பது மற்றொரு வேடிக்கை," என்கிறார் மூத்த செய்தியாளர் இரா.த.சக்திவேல்.
தொற்று பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்ததை அடுத்து, மக்கள் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பத் தொடங்கிய நிலையில், ஓமிக்ரான் என்ற புதிய அச்சுறுத்தலும் திடீர் பெருமழை, வெள்ளப்பெருக்கும் கூட்டணி அமைத்து சென்னை மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து விட்டன.
தொடர் மழையால் இம்முறையும் சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டு வாடகை செலுத்த முடியாமல் பலர் வசிக்க இடமின்றி நகரை விட்டு வெளியேறி உள்ளனர்.
சிறு, குறு வணிகங்கள், தொழில்கள் முடங்கியதை அடுத்து, லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். தனி நபர்கள் மட்டுமல்லாமல், தமிழக அரசாங்கமும் கூட போதிய நிதியும் கடன் வாங்க வழியும் இன்றி தவிப்பதுதான் உண்மை நிலை.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்திருப்பதால் நடப்பு அரசாங்கத்தை அதற்குள்ளாகக் குறைகூற முடியாது என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
இன்னொரு தரப்போ, அரசாங்கம் நினைத்தால் பல லட்ச குடும்பங்களின் அவதியைப் போக்க முடியும் என்கிறது. இத்தகைய வாதங்கள், விமர்சனங்கள், கருத்துகள் ஒருபக்கம் ஒலித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் கொரோனா தன் ஆட்டத்தை தொடர்கிறது.