கோவை: கோவையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் யோகதர்ஷினி என்ற 16 வயது சிறுமியின் முத்துக் கருப்பு காளை 529வது மாடாக களம் இறங்கியது. மாடுபிடி வீரர்கள் காளையை அடக்கத் தயாராக நிற்க, வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்தது வடமுகத்து கருப்பு.
யாருக்கும் சிக்காமல் ஜல்லிக்கட்டு களத்தில் வெறித்துக்கொண்டு ஓடியதால், மாடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, யோகதர்ஷினிக்கு சில்வர் அண்டாவும் சாப்பாட்டை சூடாக வைத்திருக்கும் பாத்திரமும் பரிசாக வழங்கப்பட்டன.
கருப்பு களத்தில் நின்று அதிக நேரம் விளையாடாவிட்டாலும் யோகதர்ஷினியை ஊக்குவிக்கும் வகையில், சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கினார்.
கடந்த வாரம் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் யோகதர்ஷினியின் காளை பிடிமாடாகப் போனது. இதையடுத்து, அவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும்விதமாக, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, யோகதர்ஷினி யைப் பரிசு வாங்கிச் செல்லும்படி ஒலிபெருக்கியில் அழைத்தார். ஆனாலும், பரிசை வாங்காமல் சென்றுவிட்டார் யோகதர்ஷினி.
"வெற்றிபெறாத மாடுகளுக்கு எப்போதும் பரிசு தரமாட்டார்கள். ஆனால், பெண் பிள்ளையாக மாட்டைக் கட்டவிழ்க்கிறேன் என்று என்னை ஊக்குவிக்க பரிசு தந்தார்கள். எல்லாருக்கும் உள்ள விதிமுறைதான் எனக்கும். என் காளை வெற்றிபெறும்போது நான் பரிசு வாங்கிக்கொள்கிறேன்," என்று பரிசை மறுத்ததன் காரணத்தைச் சொன்னார் யோகதர்ஷினி.