வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே நாட்டுப் படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மூன்று மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளயைர்கள் தாக்குதல் நடத்தினர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த நாகமுத்து (44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய மூன்று மீனவர்களும் நேற்று அதிகாலையில் கோடியக்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்களை ரப்பர் கட்டை, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கி அவர்களை கடலுக்குள் தூக்கி வீசினர். தமிழக மீனவர்களின் படகில் இருந்த 200 கிலோ மீன்பிடி வலை, மீன்கள், ஜிபிஎஸ் கருவி, கைபேசி, டீசல் போன்றவற்றையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

