சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா, பிபின் ராவத் உட்பட 128 பேர் விருது பெறுகின்றனர்
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
கூகல் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை, மறைந்த முப்படைத் தளவதி பிபின் ராவத், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயலதிகாரி சத்ய நாதெல்லா, நீரஜ் சோப்ரா, பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, காங்கிரஸ் மூத்தத தலைவர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 128 பேர் கொண்ட விருதுப்பட்டியலில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 13 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த சதிராட்டக் கலைஞர் முத்து கண்ணம்மாள், இசைக்கலைஞர் ஏ.கே.சி.நடராஜன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி, நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் வீராச்சாமி சேஷய்யா, டாடா குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி நடராஜன் சந்திரசேகரன், கிராமப்புறப் பெண்கள், சிறார்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வரும் எஸ்.தாமோதரன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் சுந்தர் பிச்சைக்கும் எஸ்.தாமோதரனுக்கும் பத்ம பூஷண் விருதும் மற்ற அனைவருக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் அளித்து கௌரவித்து வருகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என பல்வேறு பத்ம விருதுகள் அளிக்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகளைப் பெறுவோர் அறிவிக்கப்படுவர்.
இதற்கிடையே, மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்துள்ளார் மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அவருக்கு விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அதை ஏற்கப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதே போல் மேற்கு வங்க மாநில பின்னணிப் பாடகி சந்தியா முகர்ஜியும் தமக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை ஏற்க மறுத்துள்ளார்.
90 வயதில் விருது வழங்கப்படுவது தம்மை அவமதிப்பது போல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.