சென்னை: தமிழகத்தில் குடியரசு தினவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. இதையடுத்து, முப்படைகள், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியா தனது சுதந்திர நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்போது உலகத்துக்குத் தலைமை ஏற்கும் நாடாக உருவாகி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்த ஊர்தி நேற்று சென்னையில் நடந்த அணிவகுப்பில் இடம்பெற்றது.
குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவில்லை.
நேற்றைய விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கம், உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம், திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து, பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. வீரதீரச் செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.
உயிருக்குப் போராடியவரை தன் தோளில் தூக்கிச் சென்று காப்பாற்ற நடவடிக்கை எடுத்த காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா விருது அளிக்கப்பட்டது.
திருப்பூரில் நீரில் மூழ்கிய சிறுமிகளைக் காப்பாற்றிய சொக்கநாதன், சுதா உள்ளிட்டோருக்கு வீரதீரச் செயல்களுக்காக அண்ணா பதக்கத்துடன் ரூ.1 லட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.
திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியைக் காப்பாற்றிய சிறுவன் லோகித்துக்கும் விருது வழங்கி சிறப்பித்தார் முதல்வர்.
வெள்ளத்தில் சிக்கியோரை மீட்ட ராஜீவ் காந்தி, தனியரசு, உதவி மருத்துவர் அசோகன், கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் விருதுகள் பெற்றனர்.

