மதுரை: ஆவின் நிறுவன முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மதுரையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
கடந்த இரு தினங்களாக நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பண மோசடி தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ள அவர், சில தினங்களுக்கு முன்புதான் நீதிமன்றத்தில் பிணை பெற்றுள்ளார்.
ஆவின் நிறுவன மோசடியில் அவருக்கு பெரும் பங்கு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், ஏழு நகரங்களில் உள்ள ஆவின் தணிக்கை உதவி இயக்குநர்கள் அடங்கிய குழு அண்மைய சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

