சென்னை: தமிழகத்தில் வார நாட்களில் அமலில் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், ஒவ்வொரு ஞாயிறுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கும் விலக்கிக் கொள்ளப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் கொரோனா, ஓமிக்ரான் மூன்றாவது அலையின் தாக்கத்தால் மக்கள் பாதிக்கப் படாமல் இருக்க ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக கிருமிப் பரவல் தமிழகத்தில் சற்றே தணிந்து வருவதால் ஒருசில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சுழற்சி முறையில் இன்றி ேநரடியாக வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
ஆனால், மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், பாலர் பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியது.
இதையடுத்து, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ மாணவி யரின் எதிர்காலம், மக்களின் இயல்பு வாழ்க்கை மீள்வதற்கு ஏதுவாக சில கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
உணவகங்கள், விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் செயல்பட வும் அனுமதி அளித்துள்ளார்.
இனி வார இறுதி நாட்களில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று முதல்வர் கூறியதை அடுத்து, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான நேற்று கோயில்கள் திறக்கப்பட்டதால் வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.
இதற்கிடையே, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் இணையம் வழியிலேயே தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "கல்லூரிகள் பிப்ரவரி 1 முதல் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் தேர்வுகள் இணையம் மூலமாக நடைபெறும். இந்த தேர்வுகள் முடிந்தபிறகு மாணவர்கள் கல்லூரிக்கு வருகை புரிய வேண்டும். செய்முறைத் தேர்வு நேரடியாகவே நடைபெறும்," என்றார்.
திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 100 பேரும் இறப்பு நிகழ்வுகளுக்கு அதிகபட்சமாக 50 பேருக்கு மட்டுமே அனுமதி. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளுக்குத் தடை தொடர்கிறது.

