சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணிப் பங்கீடு, வெற்றி வியூகம் குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வார்டு பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது.
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இரண்டு மேயர், 10 நகராட்சித் தலைவர் இடங்களை கோரியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியபோது, "பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நியமிக்கும்போது விசிகவிற்கும் போதிய இடங்களையும் நல்ல வாய்ப்புகளையும் வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்," என்றார்.
இதற்கிடையே, வரும் திங்களன்று தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது.
அத்துடன், தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுடன் ஆலோசனையையும் அது நடத்தி வருகிறது.
கோவையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தலைமையில் பாஜகவினர் ஆலோசித்தனர்.
அதிமுக-பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில் ஆகிய நான்கு மாநகராட்சிகளையும் பாஜகவுக்கு ஒதுக்கும்படி அக்கட்சி வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மநீம சார்பில் நான்காவது கட்ட 143 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதன் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். "மாற்றத்திற்கு வாக்களியுங்கள்," எனவும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் கட்சியும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் வழங்கமுடியாது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்கக்கோரி விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்த நிலையில், அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்யமுடியும் என்றும் பதிவு செய்யப்படாத நிலையில் தனியாக சின்னம் ஒதுக்க முடியாது என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலின்போது விஜய்யின் படங்களையும் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியையும் வேட்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என இக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

