சென்னை: தமிழகத்தில் தற்போது 20 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த அவர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்றார். இம்மாவட்டங்களில் தொற்று பாதிப்பைக் குறைக்க போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோர் என 211,000 பேர் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரில் ஐந்து விழுக்காடு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்ட அவர், சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் தொற்று குறைந்து வருகிறது என்றார்.
"புது வகையான கொரோனா தொற்று பரவி வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரபூர்வ தகவலை மட்டும் பொதுமக்கள் நம்ப வேண்டும்," என்றார் ராதாகிருஷ்ணன்.
இதற்கிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை தங்களது வேட்புமனுக்களுடன் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

