சென்னை: பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களமிறங்குகிறது பாட்டாளி மக்கள் கட்சி. இதையடுத்து முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை நேற்று வெளியிட்டது.
அதில் சென்னை, சேலம் மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்தது பாமக. அதன் பின்னர் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி, தனித்துப் போட்டியிட்டது.
மொத்தம் ஒன்பது மாவட்டங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் எதிர்பார்த்த அளவில் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. எனினும் திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி கிடையாது என்று பாமக தலைமை தொடர்ந்து கூறி வந்தது.
இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து களமிறங்குமா அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற விவாதம் கடந்த சில நாள்களாக நீடித்து வந்தது.
இந்நிலையில் அதிமுக தலைமை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் திடீரென சில விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அதிமுக கட்சித் தலைமை வலுவாக இல்லை என்றும் தொண்டர்களை அக்கட்சித் தலைமை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் ராமதாஸ் விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாமக தலைமை. அதில், சென்னையில் 148 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் சேலம் மாவட்டத்தில் 60 வார்டுகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாமக மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
"பாமகவுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் ஜி.கே.மணி.
இம்முறை பிராமணர்கள் தொடங்கி அனைத்து சமூகத்தினருக்கும் பாமக வாய்ப்பு வழங்கி உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பாமக வேட்பாளர்களில் அதிகமான புதுமுகங்கள், இளைஞர்கள், வழக்கறிஞர்கள், படித்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் உள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்குவோம் என ஜி.கே.மணி சூளுரை

