சென்னை: உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரொக்கப் பணம், பொருள்களை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் அடுத்த மாதம் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 26ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அன்று மாலையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிட்டதால் தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க மாநிலத் தேர்தல் ஆணையம் பல்வேறு பறக்கும் படைகளை அமைத்துள்ளது.
இப்படையினர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அப்படைகள் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாள்களில் மட்டும் சென்னையில் ரூ.13.74 லட்சம் மதிப்புள்ள ரொக்கப் பணம், பரிசுப் பொருள்களைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மாநகரில் மட்டும் இதுவரை 13,399 பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் 1,920 சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், பல இடங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளும் கிழிக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வாகனச் சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.

