சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக தலைமை மீது பாஜகவுக்கு எந்தவித வருத்தமும் இல்லை என்றார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிமுக, பாஜக இடையே கடந்த சில தினங்களாக இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
பாஜக மொத்தமுள்ள இடங்களில் சுமார் 35 விழுக்காடு இடங்களைக் கேட்டதாகவும் அதிமுக தலைமையோ எட்டு விழுக்காடு இடங்களை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாகக் கூறியதாகவும் தகவல் வெளியானது.
அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளின்போது 20 விழுக்காடு வரை பாஜக இறங்கிவந்த நிலையில், அதிமுக தலைமை தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, கட்சியின் மேலிட உத்தரவின்படி, இம்முறை தனித்துப் போட்டியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
மூத்த தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தாம் நேசிக்கும் தலைவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தலைவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை என்றார்.
"நகர்ப்புற தேர்தலில் தனித்துப் போட்டி என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது தொடரும். தனித்துப் போட்டியிடுவது என்பது கடினமான முடிவு அல்ல.
"தொண்டர்களின் கோரிக்கைக் குச் செவி சாய்த்துள்ளோம். விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளோம்," என்றார் அண்ணாமலை.
இதையடுத்து, பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கி உள்ளது. அநேகமாக, இன்று காலை அப்பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும்
இதற்கிடையே, இன்று முதல் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடையும் என அரசியல் கவனிப் பாளர்கள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு வார்டிலும் நிலவும் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு கட்சித் தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும் என திமுக தலைமை வேட்பாளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
அப்பிரச்சினைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்பது அல்லது தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்கி மக்களின் நம்பிக்கையைப் பெறுவது என பிரசார வியூகத்தை வகுத்துள்ளது.
இதற்காக திமுக தலைமையகத்தில் தற்காலிக தேர்தல் செயல்பாட்டு அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வார்டுகளைக் கைகழுவி விடக்கூடாது என்றும் திமுக தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு செயல்படவில்லை என்றும் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிகிறது.
இந்திய ஜனநாயகக் கட்சி, நடிகர் விஜய்யின் ரசிகர் மன்ற அமைப்பு என சில தரப்பினர் தனித்து களம் காண்கின்றனர்.
அவற்றின் சார்பாகப் போட்டியிடுவோர் தத்தம் வார்டுகளில் உள்ள நிலவரத்துக்கு ஏற்ப பிரசாரம் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்ப்பு

