சென்னை: தமிழகத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
2021 - 2022ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் தமிழகத்தில் சுமார் 8.3 மில்லியன் பேர் விமானச் சேவையைப் பயன்படுத்தி உள்ளதாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை நான்கு மில்லியனாக இருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இதுவரை 85,606 விமானச் சேவைகள் மூலம் 8.3 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள இந்திய விமான நிலைய ஆணையம், முந்தைய நிதியாண்டில் 50,830 விமானச் சேவைகளைப் பயன்படுத்தி சுமார் 4 மில்லியன் பேர் பயணம் மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
"நடப்பு நிதியாண்டில் இதுவரை 34,776 கூடுதல் விமானச் சேவைகள் மூலம் 4.2 மில்லியன் பேர் கூடுதலாக பயணம் மேற்கொள்ள முடிந்தது.
ஆக அதிகமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து 65,970 விமானச் சேவைகள் வாயிலாக சுமார் 6.4 மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.56 மில்லியன் அதிகம்.
"கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி விமான நிலையங்களிலும் விமான சேவைகள், பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது," என இந்திய விமான நிலைய ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, சேலம் விமான நிலையத்தில் மட்டும் முந்தைய ஆண்டைவிட ஒப்பீட்டு அளவில் நடப்பாண்டில் பயணிகளின் எண்ணிக்கை 72.5 விழுக்காடு சரிவு கண்டுள்ளது.

