சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் தேர்வு என்பது ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வது போன்ற நெறிமுறைகளுடன் கண்டிப்பானதாகவும் கட்டுக்கோப்பானதாகவும் இருக்க வேண்டும் என அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
"குற்றப் பின்னணி ஏதேனும் இருந்தால், அவை தொடர்பான வழக்குகளில் தன்னை நிரபராதி என்று சட்டபூர்வமாக நிரூபிக்கும் வரை அவர்களை நிச்சயமாக வேட்பாளராகத் தேர்வு செய்திடல் கூடாது. இதைக் கட்சி நிர்வாகிகள் தவறாமல் மனதில் கொள்ள வேண்டும்," என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
திமுக வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் நடுநிலை தேவை என்றும் சொந்த விருப்பு வெறுப்புகள் சிறிதளவும் தலையெடுக்க அனுமதிக்கவே கூடாது என்றும் அவர் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
"வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான இடப் பங்கீடு, வாக்கு சேகரிப்பு ஆகியவற்றை திமுக நிர்வாகிகள் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்," என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

