சென்னை: ஒரு சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சொன்னது போல் நடக்காமல் ஏமாற்றியதால் மனமுடைந்த சிறுமி தன்னைத் தானே மாய்த்துக்கொண்டார். இந்தக் குற்றச்செயலுக்கு காரணமாக இருந்த காவலரை சிபிசிஐடி காவல் துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள இவரை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை, மாதவரம் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிபவர் மகேஷ், 27. இவர், கடந்த 2020ல் சமூக வலைத்தளம் வழி சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்பாகப் பழகி, அவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, இருமுறை தாய்மை அடைய வைத்து, இருமுறையும் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்.
அதன்பின், சிறுமியுடனான தொடர்பைத் துண்டித்துவிட்டார்.
இதனால், மனவேதனை அடைந்த சிறுமி தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அதற்கு முன்னதாக, காவலர் மகேஷ் தன் வாழ்வை நாசமாக்கி விட்டதாக 'ஸ்மார்ட் போனில்' காெணாளியாகப் பதிவு செய்து, அதையே தன் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளும்படி அந்தச் சிறுமி கூறியிருந்தார்.
இந்தப் புகாரை எம்கேபி நகர் மகளிர் காவல்நிலையத்தினர் முறையாக விசாரிக்காமல் தற்கொலை என வழக்குப் பதிந்தனர்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், சிபிசிஐடி காவல்துறை விசாரணையில், மகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

