சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நிதி நிறுவனம் நடத்தி, பொதுமக்களின் ரூ.40 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கு தொடர்பில், பங்குச் சந்தை தரகரான பொறியியல், எம்பிஏ பட்டதாரியை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காரைக்குடி டி.டி.நகரைச் சேர்ந்தவர் சோம கணேசன், 35. இவர் 'கேப் ஸ்டாக்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தை தரகராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், உறவினர்கள், படித்த நண்பர்கள், அக்கம்பக்கத்தில் வசித்தவர்களிடம் பங்கு வர்த்தகம், 'ரியல் எஸ்டேட்' தொழிலில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறி 61 பேரிடம் 40 கோடி ரூபாய் அளவுக்கு சோம கணேசன் மோசடி செய்ததாகப் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில், சோம கணேசன் தலைமறைவானார்.
இதற்கிடையே தன்னிடம் வாங்கிய பணத்தை சோம கணேசன் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு தலைமறைவாகி விட்டதாக காரைக்குடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகார் தொடர்பாக அவரது மனைவி வள்ளியம்மையிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது தனது கணவரை பல நாள்களாகக் காணவில்லை என்றும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆள்கொணர்வு மனுத்தாக்கல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
மற்றொருபுறம் காவல்துறை யினரும் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் சோம கணேசன் முன்னிலையானார்.
அதன் பிறகு, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சோம கணேசனை மோசடி வழக்கில் காரைக்குடி வடக்கு காவல் துறையினர் கைதுசெய்து, காரைக்குடிக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

