ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த வேட்பாளர்களுடன் சேர்ந்து வாக்கு கேட்கச் செல்லும் ஆண்கள், பெண்களுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை பணமும் சாப்பாடும் வழங்குவதால் வழக்கமான கட்டுமானம், விவசாயப் பணிகளைத் தவிர்த்து கூலித் தொழிலாளர்கள் பலர் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், வழக்கமான கட்டுமானப் பணிகளும் விவசாயப் பணிகளும் பாதிக்கப்பட்டு வருவ தாகவும் போதுமான அளவில் அன்றாடப் பணிக்கு ஆள்கள் கிடைப்பது அரிதாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, விவசாயப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள நூறு நாள் வேலையாள்களை ஊராட்சி நிர்வாகத்தினர் அனுப்பிவைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

