வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாநிலம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் இந்தப் பணி நடைபெறும் என்றும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி முடிந்த பின்னர் வாக்குப்பதிவு மையங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படும்.
தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள பொருள்களை ஆட்சியர் பார்வையிடுவார் என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளின் பாதுகாப்பு குறித்து அவர் ஆய்வு மேற்கொள்வார் என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
பாதுகாப்பு அறையின் முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கு உள்ளேயும் வெளியிலும் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் கட்சி சின்னம், அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் உடைகள், பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், முகவர்கள் ஒவ்வொரு வாக்காளரும் யாருக்கு வாக்களிக்கின்றனர் என்பதை நேரடியாகத் தெரிந்துகொள்வதோ, மறைமுகமாக அறிய முயற்சிப்பதோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
"வாக்குச்சாவடி முகவர், வேட்பாளரின் பெயர், அவரது தேர்தல் சின்னம் அடங்கிய எதையும் வைத்துக்கொண்டு வாக்குச்சாவடிக்குள் பணியாற்றக் கூடாது.
"வாக்காளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சைகை மூலமாகவோ அல்லது சங்கேதக் குறிகள் மூலமாகவோ எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்கத் தூண்டக்கூடாது," என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

