அடிப்படை பிரச்சினைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களை திக்குமுக்காட வைப்பதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என கட்சிப் பாகுபாடு ஏதுமின்றி, சுயேச்சைகள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களிடமும் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளைக் குறிப்பிட்டு, அவற்றுக்கான தீர்வு என்ன என்று பொதுமக்கள் கேட்கின்றனர்.
நீண்ட காலமாக ஒரே பகுதியில் வசித்து வருபவர்கள், முந்தைய தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று காரணம் கேட்பதால் வேட்பாளர்கள் பதில் அளிக்க முடியாமல் தடுமாறுகின்றனர்.
சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ள இன்றைய சூழலில், பொதுமக்களுக்கு அனைத்துவிதமான தகவல்களும் கிடைத்துவிடுகின்றன. குறிப்பிட்ட ஒரு வார்டில் கடந்த நான்கைந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின்போது, என்னென்ன பிரச்சினைகள் நிலவின, அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டனவா இல்லையா, எந்தக் கட்சியின் ஆட்சியில் அடிப்படைத் தேவைகளுக்கான திட்டங்கள் நிறைவாகச் செயல்படுத்தப்பட்டன, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் யாரேனும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ளனரா, தண்டனை பெற்றுள்ளனரா எனப் பல்வேறு தகவல்கள் கிடைக்கின்றன.
அவற்றை உறுதி செய்துகொண்டு வாக்காளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க இயலாமல் வேட்பாளர்கள் தடுமாறுவது குறித்து தகவல் அறியும் கட்சிகளின் மேலிடப் பிரமுகர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், திரைப்படக் கலைஞர்களை பிரசாரத்துக்கு அனுப்பி வைக்கின்றனர்.
"ஆனால் அவர்களும் வேட்பாளர்களைப் போலவே வாக்குறுதி அளிப்பது, எதிர்த்தரப்பினரை விமர்சிப்பது என்று பழைய வழக்கத்தையே பின்பற்றுவதால் வாக்காளர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது.
"மேலும், பொதுவாக நகர்ப்புற வார்டுகள் அனைத்திலுமே சமூக நலச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்கள் பகுதியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இச்சங்கங்கள் நடவடிக்கை மேற்கொள்வது வழக்கம்.
"தேர்தலில் வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சியினரிடம் அந்தப் பிரச்சினைகள் குறித்து இச்சங்கங்களின் நிர்வாகிகள் அமைதியாக கேள்விகளை முன்வைப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன," என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.
சென்னையில் பெரும்பாலானோர் மழை, வெள்ளம் குறித்த கேள்விகளையே வேட்பாளர்களிடம் கேட்கிறார்கள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளை, குடிநீர், கழிவு நீர்ப் பிரச்சினை, லஞ்ச விவகாரம் குறித்து கேட்பதாகத் தெரிகிறது.
புதிதாக களமிறங்கும் சுயேச்சைகளுக்கு பிரசாரத்தின்போது இத்தகைய நெருக்கடிகள் இல்லை. பிற கட்சி வேட்பாளர்களிடம் பொதுமக்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கான தீர்வையே, தங்களுடைய தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சில பகுதிகளில் மக்களுக்கு நன்கு அறிமுகமான நலச்சங்க நிர்வாகிகளும் சமூக நல ஆர்வலர்களுமே தேர்தல் களத்தில் குதித்துள்ளனர்.
விஜய் மக்கள் இயக்கம் போன்ற சில புதிய அமைப்புகள், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் நம்பிக்கையுடன் போட்டியிடுகின்றனர்.

