சென்னை: பத்து, 12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் இவ்விரு வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்த இந்தத் தேர்வு உதவும்.
அதனால் பொதுத்தேர்வுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் இந்தத் திருப்புதல் தேர்வுக்கும் அளிக்கப்படுவது வழக்கம்.
கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளித் தேர்வுகளை தொடர்ச்சியாக நடத்த முடியவில்லை. இந்நிலையில், தொற்றுப் பாதிப்பு குறைந்திருப்பதால், திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது.
மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அதற்கு முந்திய நாளே அத்தேர்வுக்கான வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானது தெரியவந்துள்ளது.
13ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக் குரிய வினாத்தாளும் இவ்வாறு முதல் நாள் இரவே வெளியானதாகக் கூறப்படுகிறது.
இதனால் கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

