விழுப்புரம்: பிரபல திரைப்பட நடிகை ஊர்வசியின் இளைய சகோதரரின் மனைவி வறுமை காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த 54 வயதான சுசீந்திரன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இவரது தங்கை பிரமிளாவின் கணவர் கமல், நடிகை ஊர்வசியின் சகோதரர் ஆவார்.
கமலுக்கும் அவரது மனைவி பிரமிளாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இதனால் தன் அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டார் பிரமிளா.
இருவருக்குமே நிரந்தர வேலை என்று எதுவும் இல்லை. மேலும் வேறு வகையான வருமானமும் இல்லாததால் வறுமையில் வாடியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் வசித்து வந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டார் சந்தேகமடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பிரமிளாவும் அவரது அண்ணன் சுசீந்திரனும் வெவ்வேறு அறைகளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது.
காவல்துறையினர் வீட்டில் சோதனை நடத்தியதில் இருவரும் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
ஏழ்மை, உடல்நிலை சரியில்லாதது உள்ளிட்ட காரணங்களால் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதாகவும் வீட்டு வாடகையைக் கூட செலுத்த இயலாமல் தவித்ததாகவும் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களின் இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணமல்ல என்றும் வீட்டில் உள்ள பொருள்களை விற்று வீட்டு உரிமையாளரிடம் வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நடிகை ஊர்வசியின் சகோதரியும் நடிகையுமான கல்பனா முன்பு பிரமிளாவுக்கு பண உதவி செய்து வந்துள்ளார். எனினும் கல்பனா இறந்தபிறகு வேறு யாரிடம் இருந்தும் பிரமிளாவுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

