கோவை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் நிறைவுபெற உள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால், பிரசாரம் செய்வதற்கு இன்னும் சில மணி நேரங்களே எஞ்சியிருப்பதால், இறுதிக்கட்டப் பிரசாரப் பணிகளில் வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவையில் பிரசாரம் செய்த முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, "தமிழகத்தில் பொருளாதாரம் பின்தங்கியுள்ளது. 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக ஸ்டாலினும் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக உதயநிதியும் மாறி மாறி பொய்ப் பிரசாரம் ெசய்து வருகின்றனர். திமுக ஒரு வர்த்தக நிறுவனமாக மாறிவிட்டது," என கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
அதேபோல், "எல்லோருக்கும் விடியல் தரும் ஆட்சி திமுகதான் என்றும் மிசாைவயே பார்த்த என்னை பழனிசாமி மிரட்டமுடியாது," என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காெணாளி பிரசாரம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
"2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் என பழனிசாமி ஆருடம் சொல்கிறார். கற்பனைக் கோட்டை கட்டிக்கொண்டு பாஜகவிற்கு 'டப்பிங்' பேசி வருகிறார். இத்தேர்தலோடு அதிமுகவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்," என்றார்.
"தமிழகத்தில் மதுவிலக்கு குறித்து திமுக-அதிமுக விவாதத்திற்கு தயாரா?" என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.
"50 ஆண்டுகளாக திமுக-அதிமுக கட்சிகள் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு உருப்படியாக எதையும் நிறைவேற்றவில்லை," என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டி உள்ளார்.
"அதிமுகவினர் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள், திமுகவினர் எடுத்துப் பழக்கப்பட்டவர்கள்," என்று நாகர்கோவில் பிரசாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
மக்களின் கேள்விகளுக்குப் பயந்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் நேரில் பிரசாரம் செய்யாமல் காணொளி வழி பிரசாரம் செய்து வருகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறை கூறியுள்ளார்.
இதற்கிடையே, தூத்துக்குடியில் நடந்த அதிமுக பிரசாரக் கூட்டத்தில் சொப்பன சுந்தரி, வாயாசாமி பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்க சுயேச்சை வேட்பாளர்கள் ரூ.2,000 வரையும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில இடங்களில் மூக்குத்தி, குக்கர், அரிசி மூட்டை, புடவை, மளிகைப் பொருள்கள் என விதவிதமான பரிசுகள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

