சென்னை: தஞ்சாவூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கோரி ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற 35 பேரை வரும் பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏபிவிபி அமைப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ அமைப்பாகும். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் உள்பட 35 பேர் முதல்வரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது தங்களது எச்சரிக்கையையும் மீறி செயல்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.
இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
தேர்தல் விதிமுறை நடப்பில் இருப்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாத சூழலில், முதல்வர் இல்லத்தை முற்றுகையிடுவது மாணவர்களே என்றாலும் குற்றம் என கூறிய நீதிமன்றம், வரும் 28ஆம் தேதிவரை அவர்களை காவலில் அடைக்க உத்தரவிட்டது.

